பசி – 4

மே 13, 2007

பாரத்வாஜ முனிவரின் மகன் துரோணரின் மனைவிக்குத் தன் குழந்தையின் (அஸ்வத்தாமன் ?) பசியை அடைக்க வழி தெரியவில்லை. அப்பெண்மணி. அரிசி மாவை தண்ணீரில் கரைத்துப் பால் என்னும் தோற்றம் ஏற்படுத்தி குழந்தைக்குக் கொடுத்தாள்.

இக்கபடமான வாழ்க்கை துரோணருக்கு அதிர்ச்சியளித்தது. அவரிடம் பணம் சம்பாதிக்க எந்த திறமையும் அப்போது இல்லை. பிழைக்க வழி தெரியாமல் அவதிப்பட்ட அக்காலத்தில், பரசுராமர் (ரேணுகா மற்றும் ஜமதக்னி முனிவரின் மகன், திருமால் அவதாரம்) தானங்கள் செய்யும் நாள் என்று ஒரு நாள் உண்டு என்பது துரோணருக்குத் தெரியவந்தது.

அந்நாளில் துரோணர், பரசுராமரைத் தேடிச் சென்ற காலம், தானங்கள் எல்லாம் முடிந்து ஒன்றுமே இல்லாத காலம்.

பரசுராமர் அப்போது கொடுக்கத் தன்னிடம் பொருள் ஏதும் இல்லை என்று கைவிரித்து விட்டார்.

துரோணர் அதற்கு, ” சொர்க்க வாசலில் கதவு திறக்கும். உள்ளே போகலாம் என்று ஆயிரம் ஆண்டுகள் கண்விழித்தபடியே தவம் இருந்த ஒருவன், கடைசி நாள் அயர்ச்சியில் ஒரு விநாடி கண் மூடி திறந்த காலத்தில் கதவு திறந்து, பின் உடனே மூடிக்கொண்டால், அவனது மனநிலை எப்படி இருக்கும் ? அந்த மனநிலையில் நான் இப்போது இருக்கிறேன்.” என்றார்.

இந்த பதிலால் மனவெழுச்சி அடைந்த பரசுராமர், தன்னிடம் கொடுக்க தனது போர்த் திறமை மட்டுமே உண்டு எனவும், அதைத் துரோணருக்குத் தானமாகக் கற்பித்தார்.

அந்த தானத்தின் பயனால் துரோணர் அடைந்த பதவி தான் மகாபாரதத்தில் குரு பதவி.

அப்பதவியில், அவர் மரணம், அஸ்வத்தாமன் இறந்தான் என்ற கபடமான நிகழ்ச்சியால்.

தன் மகனின் பசி மற்றும் கபட வாழ்க்கை
இவற்றிலிருந்து வெளிவந்த துரோணரின் மரணம்
தன் மகனின் மரணம் என்ற ஒரு கபட நிகழ்ச்சியால்.


பசி – 3

மே 12, 2007

என்னுடன் படித்தவர்கள் நல்ல நிலைமையில் உள்ளனர். அவர்களையேப் பார்த்துப் பழகிய நான் சென்ற வாரம் ஒரு திருமணத்தில் காய் நறுக்கும் கோலத்தில் என் பள்ளி நண்பன் வாசுவைப் பார்த்து திகைத்தேன்.
முதலில் அவன் தானோ என்று சந்தேகம், பின்பு அவன் அடுத்தரிடம் பேசும் தோரணை அவனை எனக்கு அடையாளம் காட்டியது.

மிமிக்ரி செய்வதில் தேர்ந்தவன். அவன் பேசத் துவங்கினாலே எங்கள் நட்பு வட்டம் சிரிப்பில் மிதக்கும். அவன் குரல், உல்லாசம் நிறைந்த அந்தக் கால வாழ்க்கையை ஒரு கணம் என் நினைவில் மின்னலடித்தது.

எனது வழுக்கைத் தலை அவனுக்கு என்னை அடையாளம் காண சிரமம் இருந்தது. நானாகச் சென்று என்னை அறிமுகப்படுத்திய பின் அவன் முகத்தில் என்னை நினைவுக் கொண்டுவந்த மகிழ்ச்சி உடனே தெரிந்தது. ராமா, நீயாடா? என்று கத்திக் கையோடு என்னைக் கட்டியணைத்தான்.

பெருங்களத்தூர் ஸ்டாண்டர்ஸ் மோட்டார்ஸ் தொழிற்சாலையில் ஒரு தொழிலாளியாகப் பணிபுரிய வேண்டும் என்பது அவனின் அந்தக் காலக் கனவு மற்றும் இலட்சியம். இன்று அவனின் கனவும் நிஜம் இல்லை, அந்தத் தொழிற்சாலையும் இல்லை. பரஸ்பர விசாரிப்புக்குப் பின் அவனது இந்த வாழ்க்கைப் பற்றிப் பேச்சு திரும்பியது.

அவன் எல்லாவிதச் சமையலும் செய்வதில் தேர்ந்தவனாம். அவனுக்குத் தெரியாத சைவச் சமையல் வகை இன்றுவரை கிடையாதாம்.

அவன் சொன்னான், “ஒவ்வொரு மனிதனுக்கும் நினைவு எப்படி அவசியமோ, அப்படியே புனைவும் அவசியம்”. வாழ்க்கையில் உள்ள வினோதத்தையும், யதார்த்தமற்றப் போக்கையும் எதிர்கொள்ள இது மிகவும் அவசியம்”.

என்னால் விதவிதமான பல விலையுயர்ந்த உணவு வகைகளைச் சமைக்க முடியும். எனக்கும் அந்த உணவிற்கும் உள்ள இடைவெளி மிகவும் அதிகம். பல வித விலையுயர்ந்த உணவு என்னால் சமைக்கப்பட்டு பலருக்குப் பரிமாரப்படும்போது எனது ஆத்மா ஒரு நிறைவு அடைகிறது. நான் அந்தப் பசியையும், உணவையும் சேர்த்துக் கற்பனையில் அந்தக் கலப்பு நிகழ்ச்சியை என்னை வைத்து எண்ணி மனநிறைவடைகிறேன்.

எனது தின வாழ்க்கையில் நான் உண்ணும் உணவு வேறு வகை. பசி என்பதை அனுபவித்துப் பார்த்தவன் நான். அப்பசியை அடக்க நான் செய்த பரிசோதனை முயற்சிகள் பல. அதில் ஒன்று என்னால் மறக்க முடியாதது. “பசி என்பதை அடக்க வினோதமான சில பழக்க வழக்கங்கள் பசித்தவர்கள் இடையே உள்ளன. அதில் ஒன்று சிகரெட் அல்லது சுருட்டுச் சாம்லை நீரில் நனைத்து நக்கிச் சுவைப்பது. எனக்குச் சிகரெட் பிடிப்பதில் விருப்பமில்லாவிட்டாலும், அதன் சாம்பல் தரும் சுவைக்கு ஈடாக வேறு ருசியும், போதையும் வேறெவற்றிலுமில்லை.”

நான் செய்வது யாருக்கும் தீங்கில்லை.
ஆனால் என் செயலில் எனக்கு உறுத்தலில்லை.
இது நான் உருவாக்கிய வலி நீக்கும் மருந்து.

நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

“நாய்கள் அமைதியாகப் பசியின்றி
வாழ்ந்து சாகும் உலகத்தில் தான்
இறைவன் இருப்பாராம்.”
என் நண்பன் போன்றவர் பசியின்றி
வாழ்ந்து சாகும் உலகத்தில்
யார் இருப்பார்கள் ?”

எனக்குத் திருமூலர் பாடல் நினைவுக்கு வருகிறது.

“அன்புள் உருகு அழுவான் அரற்றுவன்
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
என்பொன் மணியை இறைவனை யீசனைத்
தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே”


பசி – 2

மே 12, 2007

எனது எதிர் வீட்டுக் காம்பவுண்ட் சுவர் வழியாக ஒரு எச்சில் இலை கொஞ்சம் உணவுடன் சாலையில் வந்து விழும் ஒலி கேட்டு இன்று மூன்று ஜீவன்கள் திரும்பிப் பார்த்தன. அந்த மூன்று ஜீவன்களில் நானும் ஒருவன். மற்ற இரண்டு ஜீவன்கள் ஒரு ஆடும், நாயும்.

இரண்டும் ஆர்வத்துடன் இலையை நோக்கி ஓடி வந்தன. நாய் மிகுந்த தன்னம்பிக்கையுடனும், அதிகாரத்துடனும், அந்த இலையை நெருங்கி முகர்ந்து பார்த்து பின் நக்கிச் சாப்பிடத் துவங்கியது.

ஆட்டிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அது ஒரு முறை குரலெழுப்பித் தன் இருப்பைத் தெரிவித்தது, பதிலுக்கு நாய் கடுமையாக முகம் திருப்பிக் வள் என்று குலைத்தது.

ஆட்டினால் இலை வேண்டம் என்று நகர்ந்து போகவும் முடியவில்லை. அங்கேயே காத்திருக்கவும் முடியவில்லை. அந்த இலையை மீட்கவும் தெரியவில்லை.

நாய் ஆடு வந்து இலையை பறித்துவிடாமல் இருக்க சற்று அவசரத்துடன் இலையை இப்போது நக்கத் துவங்கியது.

ஆட்டிற்கு உணவு இலை. நாய்க்கு உணவு அந்த இலையில் உள்ள மிச்சம் மீதி மட்டுமே. அதால் இலையை உண்ண முடியாது.

இரண்டிற்கும் பொதுவான ஒரு அம்சம் பசி !


பசி – 1

மே 11, 2007

திடீரென்று என் மனதில் சில வாக்கியங்கள் உருவாயின. அவை அற்புதமானவையாக எனக்குப் பட்டது. இதற்கு முன் இவ்வளவு அற்புதமான வாக்கியங்கள் என்னால் சிந்திக்கப்பட்டு உருவானதில்லை என்ற உண்மையும் எனக்குப் புரிந்தது.

அந்த வாக்கியங்களை நான் திரும்ப ஒரு முறை சொல்லிப்பார்த்தேன்.
அப்போது வேறு சில வாக்கியங்களும் என் சொல்லுதலுடன்
தாமகவே வந்து சேர்ந்துவிடும் அழகு அல்லது கொடுமை நிகழ்ந்தது.

எனது கணிணியில் அவற்றைத் தட்டச்சு செய்யும் எண்ணத்தில் எழுத அமர்ந்தேன். வேகமான ஒரு ஆறு போல வார்த்தைக்குப் பின் வார்த்தை, அதன் தொடர்ச்சியாக வாக்கியம் என அவை வளர்ந்து மொத்தமாக ஒரு பொருளை உருவாக்கி விட்டன.

சக்தி என்பதின் பொருள் விளங்குவது போல இருந்தது.

இந்த எழுதுகிற வேகம் பல நிமிடங்கள் நீடிக்கிறது. சம்பவங்களும், பேச்சுக்களும் என் மூளையில் பொங்கி வழிந்தபடி உள்ளது. இந்த ஆனந்தத்தில் திளைப்பது எவ்வளவு சுகமானது ? இச்சுகத்தை எதனுடன் ஒப்பிட முடியும் ? நான் அந்த ஆனந்ததிற்குக் கட்டுப்படுவது சில நிமிடங்களே. இவையே நினைத்தபொதெல்லாம் என்னால் அனுபவிக்க முடியும் என்று என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

சிந்தனையின் வேகத்தில் எழுதிச் சமாளிக்க முடியாமல் பல விஷயங்களை நான் விட்டுவிடுவது என் மனத்துயரை அதிகரித்துவிடுகிறது. என்னால் முடிந்த அளவு வேகமாகவும், நினைவுக் கூட்டியும் எழுதுகிறேன். அப்படியும் விடுபட்ட விஷயங்கள் பல என்னை ஏக்கமுறச் செய்கிறது.

நான் எழுதியதிலும், வாசித்ததிலும் கூட இது தான் சிறந்தது என்று ஏனோ ஒரு எண்ணம் எனக்குக் தோன்றுகிறது.


பீடிகை 1

மே 8, 2007

பசி அதிகமாயுள்ளது.