இரண்டு வார்த்தைகள்

ஏப்ரல் 7, 2009

குரு மட்டும் சீடர்களுடன் பேச அனுமதி உண்டு.
சீடர்கள் பேச அவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அனுமதி. அதுவும் இரண்டு வார்த்தைகள் மட்டுமே பேச அனுமதி கிடைக்கும்

முதல் ஆண்டில் ஒரு சீடன் பேசினான், ” படுக்கை கடினம் “

இரண்டாம் ஆண்டில் அவனே பேசினான், ” சாப்பாடு நாற்றம் “

மூன்றாம் ஆண்டு மறுபடியும் அவனே பேசினான், ” நான் வெளியேறுகிறேன் “

குரு அவனை நோக்கி புன்னகைத்தார்.


தத்துவங்களைப் பேசுவது

மார்ச் 24, 2009

சரியான செயலை ஒவ்வொரு முறையும் நம்மால் செய்ய முடிகிறதா ?

இந்தக் கேள்வியில் இரு சொற்கள் “பொது” வானவை.

1. சரியான செயல், 2. செய்வது.

இந்த இரு சொற்களையும் அதன் பொருளையும் விளங்கிக் கொள்ள ஒரு காட்சித் தொகுப்பு இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

 .

இந்தத் தொகுப்பினை வடிவமைத்தவருக்கு என் நன்றி.


சிறிய திருவடி

டிசம்பர் 28, 2008

சீதையைத் தேடி அனுமன் இலங்கை நகர் உள்ளே செல்கிறான்.
அசோக வனத்திலே அவளைக் கண்டுவிடுகிறான்.
இராமனின் கணையாழியைத் தருகிறான்.
அடையாளாங்களை விவரிக்கிறான்.
சுக்ரீவனின் நட்பைத் தெரிவிக்கிறான்.

தனிமையில் தவிக்கும் தனக்கு நன்மை சொன்னவனைச் சீதை
நன்றி தெரிவிக்கிறாள். வாழ்த்துகிறாள். பின்பு மெள்ள கேட்கிறாள்,
“இலங்கை வரும் வழியில் அளக்கவும் அரிதான அலைகடலைக்
கடக்க வேண்டுமே ? சிறு குரங்கான நீ அதை எப்படிக் கடந்திருக்கமுடியும் ?”.

இக்கேள்வியால் மனம் சிதறிய அனுமன் வானளாவி நின்றான்.
எட்டுத் திக்குகளிலும் உள்ள உயிர்கள் அவனைப் பார்த்தன.


பழக் கதைகள் 9

டிசம்பர் 22, 2008

மிகப் பெரிய பழத் தோட்டத்திற்குச் சொந்தக்காரன் அவன். அவன் தோட்டத்தில் விளையும் பழங்கள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவன் தொழிற்சாலையில் இந்தப் பணியில் ஈடுபடுவோர் பலர்.ஆனால், அவர்கள் தம் வாழ்நாளில் அந்தப் பழங்களை சுவைத்துப் பார்த்ததில்லை. ஏனெனிறால், அவ்விதம் செய்வோரின் வேலை உடனே போய்விடும். மேலும், அந்தப் பழங்கள் உள்ளூரில் விற்பனையாவதில்லை. அவற்றை வாங்கிச் சாப்பிட வேண்டும் என்றால் மிகுந்த விலை கொடுக்க வேண்டியிருக்கும். இந்தப் பழ ஏற்றுமதியால் அந்த ஊர் உலக அளவில் மிகப் பிரபலம்.

அவன் தன் வெற்றிக்குக் காரணமாக சொல்வான், ” ஏழ்மையும், பட்டினியும் தான் உழைப்புக்கு ஆதாரம்.”


பழக் கதைகள் – 7

நவம்பர் 30, 2008

30112008


பழக் கதைகள் – 6

நவம்பர் 16, 2008

கோழை உலகின் உயிர்த்துயரம் பொறுக்காமல் சாந்தியைத் தேடியலைந்தவனின் கதை இது.

அவன் தன் வாழ்நாளில் யாருக்கும் உதவி செய்ததில்லை. 
அவன் ஒரு கோழை.  உதவி என்ற பெயரில் ஆபத்தைப் பலமுறை தன் வாழ்வில் சந்தித்தவன். அவன் இறந்த பிறகு அவனது கணக்கு வழக்கு சரிபார்க்கப்பட்டது.

மேலுலகில். இறைவன் சொன்னார், மகனே நீ நரகத்திற்கு போகக் கடவாய்.அவன் அழுதபடி சொன்னான், “இல்லை. நான் போக மாட்டேன். நான் ஒரு நல்லது கூடவா என் வாழ்வில் செய்யவில்லை ? நீங்கள் சரிபார்த்த கணக்கில் பிழை உள்ளது” என்றான். இந்த எதிர்வினையில் குழம்பிய கடவுள் அவன் கணக்கை மறுபடியும் பார்த்தார். அதில் ஒரு நிகழ்ச்சி அவரை யோசிக்க வைத்தது.

அதன்படி ஒரு நாள் அவன் ஒரு வாழைப்பழத்தை ஒரு பிச்சைக்காரனுக்கு வீசியெறிந்திருக்கிறான். இந்த நிகழ்ச்சியை கடவுள் அவனுக்கு நினைவுபடுத்தினார். அவனும் அதனை ஒத்துக் கொண்டான். மேலும், சொன்னான், அந்த வாழைப்பழம் அழுகியிருந்தது அதனால் தான் கீழே போடுவதற்கு பதிலாக பிச்சைக்காரனுக்குத் தூக்கியெறிந்தேன். கடவுள் சொன்னார், மகனே அந்தப் பழம் பாதி நன்றாக இருந்தது எனவே, நீ செய்த செயல் புண்ணியத்தில் வருகிறது. இந்த ஒரு செயலால் உனக்கு சொர்க்கம் கிடைக்க வாய்ப்புண்டு. நீ சொர்க்கத்துக்குப் போகலாம் என்றார்.

ஆனால், அவன் செல்ல வேண்டிய வழி நரகத்தைத் தாண்டி சொர்க்கத்துச் செல்வதாக அமைந்திருந்தது. மேலும், அவன் நரக்த்தைத் தாண்டி செல்ல, அவன் வீசியெறிந்த வாழப்பழத்தை அந்தரத்தில் தொங்கியபடி பிடித்துக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. அவ்விதம் அவன் செல்லும்போது, நரகத்தில் உள்ளோர் அவன் காலைத் தொங்கிப் பிடித்தபடி தம்மையும் சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்லவேண்டும் என்று அடம் பிடித்தனர். இதனால், அவன் மேலும் கனமடைந்து வாழைப்பழ பிடிப்பை விட்டு நரகத்தில் வீழும் சூழ்நிலை ஏற்பட்டது.

அப்போது, அவன் சொன்னான், “நானே என்னோட பாதி நல்ல பழத்தைப் பிடித்துக் கொண்டு போறேன். இதுல நீங்க வேற தொல்லை”: என்றான். அவ்விதம் சொன்ன அடுத்த வினாடி அவன் நரகத்தில் வீழ்ந்தான்.

அப்போது கடவுள் சொன்னார், “கடைசி சந்தர்ப்பத்திலும் நீ அந்த வாழைப்பழத்தை உன்னுடையது என்று சொன்னது தான் தவறு”


பழக் கதைகள் – 5

அக்டோபர் 30, 2008

தெரியவில்லை
அறை வெண்மை என
சிகப்பு ஆப்பிளைப் பார்க்கும் வரை

- எங்கோ படித்தது


பழக் கதைகள் – 4

அக்டோபர் 23, 2008

அந்தக் கரடிக்கு மரம் ஏறத் தெரியாது.ஆனால், அந்த மரத்தில்
பழுத்த பழத்தை சாப்பிட்டுப் பார்க்க ஆசை வந்துவிட்டது.
தன் ஆசையை தன் பறவை நண்பனிடம் சொன்னது.அதற்கு
அந்தப் பறவை பழத்தைப் பறித்துத் தர உடனடியாகச் சம்மதம் சொல்லவில்லை.

கரடி அப்பறவையைச் சம்மதிக்க வைக்க ஒரு யோசனை செய்தது. அதன்படி, அக்கரடி பழம் பறித்துக் கொடுத்தால் அப்பறவைக்கு நல்ல சுவையான தேனைக் கொடுப்பதாக வாக்களித்தது. ஆனால், கரடிக்குத் தேன் கிடைக்கும் இடம் தெரியாது. இருந்தாலும், பழம் தின்னும் ஆசையில் கரடி அப்பறவையைச் சம்மதிக்க வைக்க ஒரு யோசனை செய்தது. அதன்படி, அக்கரடி பழம் பறித்துக் கொடுத்தால் அப்பறவைக்கு நல்ல சுவையான தேனைக் கொடுப்பதாக வாக்களித்தது. ஆனால், கரடிக்குத் தேன் கிடைக்கும் இடம் தெரியாது. இருந்தாலும், பழம் தின்னும் ஆசையில் கரடி அப்பறவையைச் சம்மதிக்க வைக்க ஒரு யோசனை செய்தது. அதன்படி, அக்கரடி பழம் பறித்துக் கொடுத்தால் அப்பறவைக்கு நல்ல சுவையான தேனைக் கொடுப்பதாக வாக்களித்தது. ஆனால், கரடிக்குத் தேன் கிடைக்கும் இடம் தெரியாது. இருந்தாலும், பழம் தின்னும் ஆசையில் கரடி அப்பறவையைச் சம்மதிக்க வைக்க ஒரு யோசனை செய்தது. அதன்படி, அக்கரடி பழம் பறித்துக் கொடுத்தால் அப்பறவைக்கு நல்ல சுவையான தேனைக் கொடுப்பதாக வாக்களித்தது. …………………………………………
……………………………………………………………………………………………..
……………………………………………………………………………………………..
……………………………………………………………………………………………..


பழக் கதைகள் – 3

அக்டோபர் 12, 2008

எலந்தை பழுத்திருக்கும்
ஏறி உலுக்கி விட்டா
சித்தாடைக் குள்ளிருக்கும்
செண்டு மல்லி ரெண்டு தாரேன்.

இலந்தை பழம் போல
இங்கிதமாய் நானிருக்க
சாணி உருண்டைக்காக
சாமவழி போகலாமா ?

***
கூடி இருந்த் இடம்
கும்மாச் சரம் போட்ட இடம்
வாழப் பழம் தின்ன இடம்
பாழாக் கிடக்குது பார்

***

எலுமிசம் பழம் போல
இருவருமே ஒரு வயது
யாரு செய்த தீவினையோ
ஆளுக்கொரு தேசமானோம்

***

தமிழர் நாட்டுப் பாடல்களிலிருந்து


பழக் கதைகள் – 2

அக்டோபர் 5, 2008

பாண்டவர்களும், கெளரவர்களும் சிறுவர்களாக இருந்த போது நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி – அதன் புரிதல் முக்கியமான ஒன்று.

ஒரு நாள் எல்லா சிறுவர்களும், மாமரத்தில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பல சிறுவர்கள் மாமரக் கிளையில் உள்ள மாம்பழங்களைப் பறித்து உண்டனர்.

இதைக் கண்ட பீமன் மரத்தின் கீழே நின்றபடி யோசித்தான். பிறகு, தன் அருகில் இருந்த துரியோதனன், மற்றும் தருமனிடம் சொன்னான், “நாம் பழங்களைத் தேடிப் போகக்கூடாது. நம்மைத் தேடி தான் பழங்கள் வர வேண்டும்”.

இதைக் கேட்ட துரியோதனன், வியப்புடன் கேட்டான், “பீமா, இது எப்படி முடியும்?”

பீமன் இப்படி முடியும் என்று சொன்னபடி மாமரத்தின் தண்டுப் பகுதியைப் பிடித்து வேகமாக உலுக்கினான். இச்செயலால், பல மாம்பழங்கள் உதிர்ந்து கீழே விழுந்தன. மேலும், மரத்தில் அமர்ந்திருந்த கெளரவர் சிறுவர்களும் கீழே விழுந்து விட்டனர். அவர்களுக்கு பலத்த அடிபட்டது.

இதனால், கோபமுற்ற துரியோதனனும், கெளரவர்களும், பீமன் மீது பகை கொண்டனர்.

படைப்பாற்றல் முக்கியம், ஆனால், அதுவே மற்றவர்களைப் புண்படுத்துவதாக இருக்கக் கூடாது.


பழக் கதைகள் – 1

அக்டோபர் 1, 2008

ஒரு நாள் அந்த நண்டிற்கு சுவையான ஒரு இனிப்பு உண்ணக் கிடைத்தது. அதன் மணமும் சுவையும் அதை மயக்கியது. அந்த நண்டு ஆசையுடன் அந்த இனிப்பை உண்ணச் செல்லும்போது ஒரு குரங்கு அங்கே வந்தது.

அந்தக் குரங்கிற்கும் அந்த இனிப்பின் மேல் ஆசை வந்து விட்டது.
அப்போது, அந்தக் குரங்கு ஒரு தந்திரம் செய்து அந்த இனிப்பை நண்டிடமிருந்து பறிக்க செயலில் இறங்கியது.

அதன்படி அந்தக் குரங்கு, நண்டிடம் ஒரு மாங்கொட்டையைக் கொடுத்தது. பின்பு பின்வருமாறு பேசியது, “நண்டே, நான் உனக்கு காலத்திற்கும் பயன்படும் ஒரு பரிசு கொடுக்கிறேன். அது தான் இந்த மாங்கொட்டை. இதை நீ மண்ணில் நட்டு மரமாக வளர்த்தால் உனக்கு பல மாங்கனிகள் எதிர்காலத்தில் உண்ணக் கிடைக்கும். இவ்விதம் தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து உனக்கு உதவ என்னைவிட்டால் யாரும் உனக்குக் கிடையாது என்றது.

இதைக் கேட்ட நண்டு, உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்? மிக்க நன்றி என்றது. குரங்கு உடனே சொன்னது, நீ எனக்குக் கைம்மாறு எல்லாம் செய்ய வேண்டாம். உன் கையில் இருக்கும் இனிப்பை எனக்கு கொடு அது போதும் என்றது.

நண்டும் இனிப்பைக் குரங்கிடம் கொடுத்துவிட்டு, மாங்கொட்டையை நம்பிக்கையுடன் மண்ணில் புதைத்து, அது மரமாக வளரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்தது.

சில காலம் கழித்து, அந்த மாங்கொட்டை ஒரு மாமரமாக வளர்ந்து விட்டிருந்தது. அந்த நண்டிற்கு அந்த மரத்தை பார்க்கும்போதெல்லாம், குரங்கின் நினைப்பு வரும். நன்றியோடு அக்குரங்கை மனதில் வாழ்த்தும்.

அம்மாமரத்தில், பல மாங்கனிகள் பழுத்துத் தொங்கத் துவங்கின. ஆனால், நண்டினால் அம்மாம்பழங்களை மரத்தில் ஏறி உண்பது மிகவும் சிரமாக இருந்தது. அக்காலகட்டத்தில், முன்பு உதவிய குரங்கு மறுபடியும் அப்பக்கமாக வந்தது. நண்டினையும், மாமரத்தினையும் பார்த்தது. அம்மாம்பழங்களைக் கண்ட உடன் அவைகளைச் சாப்பிட குரங்கிற்கு ஆசை வந்துவிட்டது.

அக்குரங்கு, நண்டிடம் சொன்னது, “நண்டே, நான் மரத்தில் ஏறி, சுவையான மாம்பழங்களை ருசிபார்த்து உனக்குத் தரட்டுமா ? என்று கேட்டது.நண்டுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. குரங்கை உடனே சென்று பறித்துத் தருமாறு அவசரப்படுத்தியது.

குரங்கும், மரத்தில் ஏறி பல மாம்பழங்களை ருசித்து உண்டது ஆனால் ஒன்றைக்கூட கீழேயுள்ள நண்டுக்குத் தரவில்லை. கீழே இருந்து நண்டு, குரங்கிடம் பழங்களைப் பறித்துப் போடுமாறு மறுபடியும் கேட்டது.

இதைக் கேட்ட குரங்கிற்கு ஆத்திரம் வந்தது. அது மிகப் பெரிய ஒரு மாம்பழத்தைப் பறித்து, இந்த நண்டே பிடித்துக் கொள் என்று வேகமாகத்
தூக்கியெறிந்தது. அந்த மாம்பழத்தைப் பிடிக்க முயன்ற நண்டு, அந்த மாம்பழத்தாலேயே அடிபட்டு இறந்துபோனது.

இறக்கும்போது, அந்த நண்டு நினைத்துக் கொண்டது, “எனது நண்பன் குரங்கு மிகவும் நல்லவன். என்னால் தான் அந்த மாம்பழத்தைச் சரியாகப் பிடித்து உண்ணமுடியவில்லை”


விடுதலை

செப்டம்பர் 28, 2008

அந்த வண்ணானின் வீடு கழுதை உட்பட எல்லாப் பொருளும் அவன் வாங்கிய கடனுக்கு ஜப்தியாக வேறு ஒருவனுக்குப் போக இருந்தது.
அப்போது, அந்த வண்ணான் தான் ஆசையாக வளர்த்து ஆளாக்கிய கழுதையிடம் சொன்னான், “கழுதையே, நாளை முதல் உனக்கு வேறு எஜமானன், வேறு விதமான வாழ்க்கைச் சூழ்நிலை. எனவே, நீ இனி இங்கிருக்காதே. இந்த இரவு நேரத்தில் எங்காவது ஓடிப் போய்விடு. நான் உனக்கு விடுதலையை உபதேசிக்கிறேன்”

அதற்கு அந்தக் கழுதை , “வேறு எஜமானன், வேறு வாழ்க்கைச் சூழ்நிலை என்றாலும் நான் சுமக்கப் போகும் சுமை என்பது ஒன்றுதான். எனவே, எனக்கு ஒரு மாற்றமும் இல்லை. உனக்குத் தான் விடுதலையின் பொருள் என்பது என்னவென்று விளங்கவில்லை.” என்று சொன்னது.


விசுவாசி

செப்டம்பர் 27, 2008

அந்தத் திருடன் தன் கையில் இருந்த இறைச்சியை வீட்டுக் காவல் நாயை நோக்கி வீசியெறிந்தான். அவன் நோக்கம், அந்த நாய் அதை உண்ணும் வேளையில் வீட்டிற்குள் நுழைந்து திருடுவது தான்.

இறைச்சியை நோக்கி ஓடிவந்த அந்த நாய், அந்த இறைச்சியை முகர்ந்து பார்த்து சப்புக் கொட்டியது. ஆனால், அந்த இறைச்சியை உண்ணவில்லை. அது அந்த திருடனை நோக்கிப் பேசியது, “இந்த இறைச்சி தரும் லாபமும், சுகமும் எனக்குச் சில நிமிடங்களே. இந்த நிமிடங்கள் நான் இவ்வளவு நாள் என்னை வளர்த்த வீட்டுக்காரனுக்கு துரோகம் இழைக்கும் நிமிடங்கள்.
இந்த நிமிடங்கள் கழிந்த பின் நான் வருந்தும் காலம் இந்த நேரத்தை விட மிக அதிகம். எனவே, நான் இதைத் தொட மாட்டேன். நீ யார். உன் தேவை என்ன ? என்று வினவியது.

இந்த அணுகுமுறையில் தோல்வியுற்றத் திருடன் தலை குனிந்து பதில் பேசாமல் மெளனமாக அங்கிருந்து விலகிச் சென்றான்.


புதியது

செப்டம்பர் 23, 2008

முல்லாவின் வீட்டு வாசலில் அந்தப் பறவை மிகவும் அமைதியாக தன் சிறகுகளைத் தன் அலகால் கோதியபடி அமர்ந்திருந்தது.

இதைக் கண்ட முல்லாவிற்கு ஆச்சரியம். இதைப் போன்ற ஒரு பறவையை அவர் கண்டதேயில்லை.

அவர் பல வகையில் யோசித்துப் பார்த்தார். அவரால் ஒரு முடிவிற்கு வர இயலவில்லை.

கடைசியில் அவர் ஒரு யோசனை செய்தார். அதன்படி செயல்படவும் முனைந்தார்.

சத்தமில்லாமல் சென்று அந்தப் பறவையை அமுக்கிப் பிடித்தார்.

பிறகு, அதன் இறக்கைகள் சிலவற்றைப் பிய்த்து எறிந்தார்.

கழுத்துப் பகுதியில் உள்ள சிறகுகளின் அடர்த்தியைக் கத்தரித்துக் குறைத்தார்.

இப்போது அந்தப் பறவை அவருக்கு ஏற்கனவே கண்டறிந்த ஒரு பறவையைப் போல ஆகியிருந்தது.

முல்லா மிக்க மகிழ்ச்சியுடன் அப்பறவையை பறக்க விட்டார்.


பார்வைக் கோணம்

செப்டம்பர் 19, 2008

அந்த மான் தண்ணீரில் தன் நிழலைப் பார்த்து மகிழ்ந்தபடியே யோசனையில் ஆழ்ந்தது. அதன் கொம்புகள் அதற்கு மிகுந்த மனமகிழ்ச்சியைக் கொடுத்தது. அதன் கொம்புகளின் அழகைப் பார்த்து மகிழ்ந்தபடியே, தன் கால்களைக் கண்டது. ஒல்லியான, குச்சிபோன்ற வடிவிலான அதன் கால்கள்  அந்த மானிற்கு மிகுந்த மனக் கஷ்ட்டத்தையும், வெறுப்பையும் அளித்து.

அந்த மான் தன்க்குள் சொல்லிக் கொண்டது, ” சே, என்ன ஒரு கடவுளின் படைப்பு நான். என் கொம்புகள் அழகாகவும், கால்கள் அசிங்கமாகவும் உள்ளனவே”.

அப்போது திடீரெனப் பாய்ந்து வந்தது ஒரு சிங்கம்.
பதறி விரைந்து வேகமாக ஓடியது அந்த மான்.

அதன் வேகமான ஓட்டத்திற்குத் தடையாக அதன் கொம்புகள் காட்டு மரக் கிளைகளில் மாட்டிக் கொண்டு, வேகமாக ஓட விடாமல் தடுத்தன.
இதனால், அந்த மான் சிங்கத்திடம் மாட்டிக் கொண்டு உயிரை விட நேர்ந்த்து.

அந்தக் கடைசிக் கணத்தில் அந்த மான் மனதில் முனகியது,
” ஆபத்தில் உதவிய கால்களைப் பழித்தேன். துன்பத்தில் மாட்டிவிட்ட கொம்புகளைக் கொண்டாடினேன்.”


எந்த நாய் ?

செப்டம்பர் 17, 2008

ஒரு முறை அந்த ராஜா தன் அவையோரிடம் சொன்னார், “நான் இரண்டு நாய் வளர்க்கிறேன்”.

ஒரு நாய் பயமும்,  கோபமுமாக இருக்கும்.
மற்றது தைரியமும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

இந்த இரண்டு நாய்களும் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்றன”.

அவையிலுள்ள ஒருவர் சட்டென கேட்டார்,  ”சண்டையில் எந்த நாய் ஜெயிக்கும் ?

ராஜா சொன்னார், “நான் சாப்பாடு போட்டு வளர்க்கும் நாய் தான் ஜெயிக்கும்”.


கால வேகம்

செப்டம்பர் 15, 2008

அந்த முயல் ரத்தச் சகதியில் உயிரை விடும் கோலத்தில் துடித்தபடி இருந்தது.

ஒரு கழுகால் கொத்தி இந்த நிலைமைக்கு ஆளாகியிருந்தது அந்த முயல்.

அப்போது அந்தப் பக்கமாக வந்து, அதைக் கண்ட ஒரு குருவி,
” என்ன முயலே, நீ விரைந்து ஓடுவாயாமே ? காற்றின் வேகம் உன் வேகமாமே ? உன் கால்களுக்கு என்ன ஆச்சு ?”  என்று கேலி பேசியது.

இப்படிக் கேலி பேசியபடியே இருந்த குருவி, அதன் பின் பக்கம் ஒரு வல்லூறு வந்ததைக் கவனிக்கவில்லை.

பாதி பேசியபடி இருந்த குருவியை, வல்லூறு சட்டெனத் தூக்கிக் கொண்டு பறந்து போனது.

- ஈசாப் கதையிலிருந்து.


சுயநலமும், பொதுநலமும்

செப்டம்பர் 14, 2008

அந்த வீட்டுக்காரனுக்கு தினமும் ஒரு பூனையால் பெரும் தொல்லை ஏற்பட்டபடி இருந்தது.  இதனால், அவன் அந்தப் பூனையைப் பிடித்துக் கொல்லும் அளவிற்கு கோபம் கொண்டான்.

ஒரு நாள், அவன் அந்த பூனையை நேருக்கு நேர் சந்திக்கும்படியான சூழ்நிலை உண்டானது. கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல், அவன் கையில் கிடைத்தக் கட்டையை எடுத்து அடிக்க ஓங்கினான்.

அப்போது, அந்தப் பூனை அவனிடம், “நண்பா, நான் உன் வீட்டு எலிகளைப் பிடித்து உண்டு உனக்கு உதவினேனே, அதற்கு நீ தரும் பரிசு இது தானா ?” என்று வினவியது.

இந்தக் கேள்வியால் சற்று யோசித்த வீட்டுக்காரன், பின்பு சொன்னான்,
“பூனையே, நீ எலிகளைப் பிடித்து உண்டது எனக்காக அல்ல. உனக்காக. எப்படியென்றால், நீ எலிகளைக் கொன்று,  உண்டு, அதன் பின் அடுத்த உணவிற்கு நீ எலிகள் சேர்த்துவைத்த உணவை உண்ணாமல், என் வீட்டு உணவை உண்டது எந்த வகையில் நியாயமானது ?”  என்று சொல்லியபடியே, அந்தப் பூனையைக் கொன்று போட்டான்.

- ஈசாப் கதைகளிலிருந்து


சந்தனமும், சாக்கடையும்

செப்டம்பர் 13, 2008

அவன் மலை மேல் வளர்ந்த சந்தன மரச் சூழலில் வளர்ந்தவன். தினமும் சந்தன நீரில் குளிப்பவன்.

ஒரு நாள் அவன் மலை மேலிருந்து கீழே இறங்கி வரும்படியான சூழ்நிலை ஏற்பட்டது.

அப்படி ஒரு நாள் அவன் கீழே இறங்கி வந்த போது, தரையில் ஒரு மனிதனைச் சந்தித்தான். அந்த மனிதன் தினமும் பிழைப்புக்குச் சாக்கடையில் குளிப்பவன். அதனால், அவன் பிறகு நல்ல தண்ணீரில் ஒரு முறை குளிக்கும்படி ஆனது அவன் வாழ்க்கை.
இந்த மனிதனைக் கண்டவுடன், மலை மேல் வளர்ந்தவனுக்கு இரு முறை குளிப்பது வியப்பு ஏற்பட்டது.

சாக்கடையில் குளிப்பவனிடம் சந்தனத்தில் குளிப்பவன்
ஏன் இப்படி இரு குளியல் உனக்கு என்று கேட்டான்.
அதற்குச் சாக்கடையில் குளிப்பவன் எப்போதும் ஒரு முறை
நல்ல தண்ணீரில் குளிப்பது தான் சரியானது என்று விளக்கினான்.
இந்த விளக்கத்தால் சந்தனத்தில் குளிப்பவனும் இரு முறை
தினமும் குளிப்பது என்றாகிப் போனது.


சிப்பி

ஆகஸ்ட் 27, 2008

ஒருவன் தவமிருந்து ஒரு சிப்பியைப் பெற்றான்.
அந்தச் சிப்பி அவன் நினைத்த எதையும் உடனே தரும்.
அதன் மூலம் அவன் மிகுந்த மனநிறைவுடன் ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தான்.

ஒரு நாள் ஒரு சந்நியாசி அவன் வீட்டிற்கு வந்தார். அவன் அவரை அன்புடன் உபசரித்துப் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த சந்நியாசி ஒரு பெரிய சிப்பியைக் கையில் எடுத்தார். அந்தச் சிப்பு அவன் வைத்துக் கொண்டிருக்கும் சிப்பியைப் போலவே இருந்தது அவனை வியப்பில் ஆழ்த்தியது. ஆசையால் தூண்டப்பட்ட அவன் அந்தச் சந்நியாசியிடம் அவர் வைத்துக் கொண்டிருக்கும் சிப்பியைப் பற்றிக் கேட்டான். அதற்கு அவர் அந்த சிப்பி எதையும் உடனே இரண்டு மடங்காகத் தரும் எனச் சொன்னார்.

அவன் மேலும் ஆசையால் தூண்டப்பட்டு அந்தச் சிப்பியைத் தனக்குத் தருமாறு கேட்டான். அந்த சந்நியாசி ஒரு நிபந்தனையின் பேரில் அதைக் கொடுப்பதாக வாக்களித்தார். அது என்னெவென்றால் அவன் அவனுடைய சிப்பியை சந்நியாசியிடம் கொடுத்தால் அவர் அவருடைய சிப்பியை அவனுக்குக் கொடுப்பார். இந்த ஒப்பந்தம் அவனுக்குப் பிடித்துப் போனது. அவன் உடனே அவனுடைய சிப்பியை எடுத்துவந்து அவரிடம் கொடுத்துவிட்டு, அவரிடம் இருந்து அந்தப் பெரிய சிப்பியை வாங்கிக் கொண்டான்.

அன்று இரவே அந்தச் சிப்பியைச் சோதிக்க எண்ணி அவன் அந்தச் சிப்பியிடம் ஒரு மூட்டை தங்கம் கேட்டான். அதற்கு அந்தச் சிப்பி அவனிடம் ஏன் இரண்டு மூட்டைத் தங்கம் தருவேனே என்றது. அவன் அதனிடம் ஒரு அழகிய பெண்ணை வரவழைத்துத் தரும்படிக் கேட்டான். அதற்கு அந்தச் சிப்பி இரண்டு பெண்களாகத் தருவேனே என்றது. அவன் கேட்பதற்கெல்லாம் இவ்விதமே பதில் சொல்லியபடி இருந்தது அந்தச் சிப்பி.

அதிர்ச்சியில் ஆழ்ந்த அவன் வெளியே ஓடிவந்து சந்நியாசியைத் தேடினான். அவரை அங்கே காணவில்லை.


குருவும், சீடனும்

ஆகஸ்ட் 18, 2008

ஒரு குரு ஆப்பிள் பழத்தைக் காட்டி இது எந்த குடும்பத்தைச் சேர்ந்தது? என்று சீடனைப் பார்த்துக் கேட்டார்

சீடன் சொன்னான் “கனிகளின் குடும்பத்தைச் சேர்ந்தது”.

பையிலிருந்து ஒரு காசை எடுத்து,” இது எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தது? ” என்று கேட்டார் ஆசிரியர்.

“இது உலோகக் குடும்பத்தைச் சேர்ந்தது” என்றான் சீடன்.

“நான் எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவன்?” என்றார் குரு.

“காட்டுவாசி அல்லது மிருகக் குடும்பம்” என்று சொல்வது மரியாதை ஆகாது என்று யோசித்த சீடன், தயங்கியபடி சொன்னது,

“நீங்கள் சொர்கத்தின் குடும்பத்தைச் சேர்ந்தவர்”

அதைக் கேட்ட குரு மகிழ்ந்து, “அந்தக் குடும்பத்தில் இருக்கும் அருகதையை கடவுள் எனக்குக் கொடுக்கட்டும்” என்றார்.


கடல் மீன்

ஏப்ரல் 20, 2008

அப்பறவையானது உயர்ந்த விஷங்கள், உணவு இதில் மட்டும் கவனம் செலுத்தும். உணவாக கிடைப்பதற்கு அரிதான கனிகளை மட்டுமே தேர்ந்தெடுத்து உண்ணும். குடிக்க மூங்கில் உள்ளே தேங்கி நிற்கும் மழை நீரை மட்டுமே பருகும். வசிப்பதும் அவ்வாறே. தான் வசிக்கும் இடத்தில், தொடர்ந்து வாழமுடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அந்த இடத்தில் தன் கூட்டிற்கு மேலே தேன் தினமும் சொட்டும்படியான ஒரு அமைப்பு இருந்தாலும் அங்கே வசிக்காது. உடனே, இடத்தைக் காலி செய்துவிடும். தனக்குப் பிடித்தமான ஒரு இடத்தில் மட்டுமே வாழும்.

அப்போது வானில் அந்தப் பறவையானது மிதமான வேகத்துடன் பறந்து சென்று கொண்டிருந்தது.

கீழே, செத்த எலி ஒன்றைக் கொத்திக் கொண்டிருந்த காக்கை வானில் அப்பறவையைக் கண்டவுடன் சொன்னது, ” சூ, போ, போ வராதே இந்தப் பக்கம்” என்று சொன்னபடி செத்த எலியை சட்டென மறைத்துக் கொண்டது

இதைப் பார்த்த மீனுக்கு ஒரே ஆச்சரியம். அது காக்கையை கேட்டது, “ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்?, “. காக்கை சொன்னது, “அது காக்கை அல்ல, அதனால் தான் இப்படி. உனக்கு இது புரியாது”.

மீன் சொன்னது, “உங்கள் பறவை இனத்தை இணைப்பது பறத்தலும், ரத்த சம்பந்தமான தொடர்பும் அல்ல. சக ஜீவனை மதிப்பதும், ஒவ்வொருவரின் வாழ்விலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வழிகளையும், சூழ்நிலைகளையும் உருவாக்குவதில் தான் உள்ளது என்பது உனக்குத் தெரியாதா ? என்று கேட்டது.

அதற்குக் காக்கை சொன்னது, “உனக்கு கடல் என்றால் என்ன என்று தெரியுமா ? “பெரிதாகப் பேச வந்துவிட்டாய் என்று கோபத்துடன் சொன்னது.

மீனுக்கு கடல் என்றால் என்ன என்று தெரியவில்லை. அதற்கு ஆசை வந்துவிட்டது. கேள்வியையும், தேடலையும் எங்கேயிருந்து துவங்கலாம் என்று யோசித்தது.

ஒரே கூரையின் கீழே வாழும் தன் இனத்திடம் கேட்டால் தக்க பதில் கிடைக்கும் என்று நம்பியது. சிறியது, பெரியது, வயதானது எனப் பலவிதமான மீன்களையும் தேடிப்போய்ப் பேசியது. அதற்கு பதில் கிடைக்கவில்லை. அறிவுரைதான் கிடைத்தது.

மீன் கூட்டத்தில் உள்ள ஒரு மீன் சொன்னது, “நமக்கு இங்கே பாறை இடுக்குகளில் தண்ணீரின் வேகமான ஓட்டத்திற்கு எதிராக இங்கேயே நின்று வாழவே நம் சக்தியனைத்தும் செலவாகிறது. இதில் கடல் என்றால் என்ன? என்ற கேள்வி எனக்குச் சிரிப்புதான் வருகிறது.” என்று சொல்லிக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது.

தண்ணிரின் ஓட்டத்திற்கு எதிராக வாழ்வதில் உள்ள சவால் உனக்குப் பிடிக்கவில்லையா ? இச்சவாலை எதிர்க்கொள்ளும் வழிகளை விளக்கி ந்ம முன்னோர்கள் சொன்ன அறிவுரைகளும் எழுதிய புத்தகங்களும் உனக்குக் கண்ணில் படவில்லையா ? உன் அறிவும் முயற்சியும் இந்த வழியில் சென்றால் நம் இனத்திற்கு பெருமை மற்றும் பயனுள்ளதும் கூட என்று மற்றொரு மீன் சொன்னது.

இந்தப் பேச்சுக்களின் போக்கு பிடிக்காத பாதையில் செல்வதை உணர்ந்த மீன் “என் மனதை மாற்றிக் கொள்ளும் உரிமை எனக்கு மட்டுமே உண்டு. என்னால் அதன் மூலம் ஒரு மாறுபட்ட எதிர்காலத்தையோ, வேறுபட்ட இறந்த காலத்தையோ தேர்தெடுக்க முடியும்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டது.

தனக்குத் தெரியாமலே குறிப்பிட்ட திசையில், வேகத்தில் செல்லும் மேகம் போல, அந்த மீன் தனக்கான ஒரு வழியைத் தேர்ந்தெடுக்க முயன்றது.

அது தேர்ந்தெடுத்த வழி, “தண்ணீரின் ஓட்டத்திற்கு எதிராக இருக்க முயற்சிக்காமல், அந்த ஓட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சென்று விடுவது
.”
ஒரு நாள் தண்ணீரின் ஓட்டத்தில் வேகம் மிக அதிகமாக இருந்தது. இது தான் தருணம் என்று மீன் அந்த நீரோட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டது. அந்த வேகமும், சீற்றமும் மீனுக்குத் தாங்க முடியாமல் இருந்தது. அந்த வேகத்தில் பல இடங்களில் முட்டி மோதி, ஒரு தருணத்தில் கடல் நீர் பரப்பிற்கு மேலே அம்மீன் தூக்கியெறிப்பட்டது.

கடலுக்கு மேலே பறந்த அம்மீன் கடலின் விரிந்த பரப்பைக் கண்டது.

சிலிர்த்தது.

தன் தரிசன அனுபவத்தை இவ்விதமாக வரிசைப் படுத்திச் சொல்லிக் கொண்டது.

1. எனக்குத் தெரியாது என்று ஒப்புக் கொள்ளப் பழகிக்கொண்டேன்
2.எனக்குக் குழப்பம் வரவில்லை என்றால் நான் சரியாகச் சிந்திக்கவில்லை என்று பொருள்.
3. பிறப்பு என்பது ஒரு செயல் அல்ல, அது தொடர்விளைவு.

இவ்விதமாக தரிசன அனுபம் அடைந்த அம்மீன் மறுபடியும் சாதாரண மீன்கள் நடுவே வாழ கடலுக்குள் சென்றுவிட்டது.

இப்போது அந்த மீனுக்கும் மற்ற மீன்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.


புகழ் பெற்ற ஜென் கதை

ஜூலை 22, 2007

மலை உச்சியில் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

மலையின் கீழிருந்து மூன்று பேர் அவனைப் பார்த்தனர்.

மூவரில் ஒருவன் சொன்னான், “மலை மேல் நிற்பவன் யாருக்கோ காத்துக் கொண்டிருக்கிறான்”.

மற்ற இருவர் அவன் பேச்சை மறுத்தனர்.

மூவரில் இரண்டாமவன் சொன்னான், “யாருக்கோ காத்திருப்பவன், அந்த யாரோ வருகிறாரா என்று திரும்பிப் பார்த்த வண்ணம் நிற்க வேண்டும். ஆனால், மலை மேல் நிற்பவன் அப்படிச் செய்யவில்லை. எனவே, அவன் யாருக்கோ காத்திருக்கவில்லை. அவன் எதையோ தேட அங்கே வந்து நிற்கிறான்” என்றான்.

இரண்டாமவன் பேச்சும் ஏற்கப்படவில்லை.

மூவரில் மூன்றாமவன் சொன்னான், ” எதையோ தேடுபவன், ஆணி அடித்தாமாதிரி நின்று கொண்டிருக்க மாட்டான், அங்கே, இங்கே திரும்பிப் பார்த்தபடி தேடும் பாவனையில் இருப்பான். இவன் தியானம் செய்து கொண்டிருக்கிறான்”. என்றான்.

இந்த பதிலும் திருப்தி தரவில்லை. எனவே, அவர்கள் மலை மேல் ஏறிச் சென்று நின்றுகொண்டிருப்பவனிடமே கேட்டுவிடலாம் என முடிவு செய்து மலை மேல் ஏறி நிற்பவன் அருகில் சென்றனர்.

மலை மேல் நிற்பவனிடம், “நீங்கள் யாருக்கோ காத்திருக்கிறீர்களா ? என்று கேட்டனர்.

அவன் இல்லை என்றான்.

“நீங்கள் எதையோ தொலைத்துவிட்டு, அதைத் தேடுகிறீர்களா? என்று கேட்டனர்.

அவன் அதற்கும் இல்லை என்றான்.

கடைசியாக, “நீங்கள் இங்கே தனிமையில் நின்றபடி தியானம் செய்கிறீர்களா?” என்று கேட்டனர்.

அதற்குக்கூட, மலை மேல் நின்று கொண்டிருந்தவனிடம் இல்லை என்று தான் பதில் வந்தது.

பின் இங்கே என்ன தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று மூவரும் கேட்டனர்.

அதற்கு அவன், ” நான் இங்கே நின்று கொண்டிருக்கிறேன்” என்றான்.


சுவாரசியம்

ஜூன் 27, 2007

“நான் சொன்னேன்…” என்று சொல்லியபடியே தொடர்ந்தது சிங்கம், நான் சொன்னேன்…, என்ன சொன்னேன்? என்று கேட்டது.

ராஜா ! நீங்கள் உங்களைப் பற்றித் தான் சொல்லிக் கொண்டிருந்தீர்கள் என்றது நரி பவ்யமாக.

ஆமாம். எனக்குத் தெரியும். நான் ஒரு சுவாரசியமான விஷயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது, மிகவும் மூர்க்கமாக என் பேச்சு குறுக்கிடப்பட்டது என்றது.மேலும், என்னைப்பற்றிச் சொன்னேன் என்று ஏன் சொல்கிறாய் என்றது.

நீங்கள் எது பேசினாலும் எங்களுக்கு அது சுவாரசியம். ஏன் பிரித்துப் பேசுகிறீர்கள் ? என்றது நரி.


ஆசை

ஜூன் 10, 2007

காகத்திற்கு குயில் போல பிறந்து வாழ வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. அது இறைவனை தினமும் மறுபிறப்பு என்பது தனக்கு குயிலாக வேண்டும் என்று வேண்டிக்கொண்டது.

ஒரு நாள் காகம் இறந்துபோனது.

அதன் மறுபிறப்பு மறுபடியும் காகமாகவே அமைந்துவிட்டது.

கோபம் கொண்ட காகம் இறைவனை நோக்கிக் கேள்வி எழுப்பியது.

” எனக்கு ஏன் இப்படி? நான் எனது விருப்பத்தை உனக்கு தினமும் தெரிவிக்கவில்லையா?”

இறைவன் சொன்னார், ” வேப்பம்பழம் மீது ஆசை வைத்தால் காகமாகப் பிறக்கவேண்டியது தான்.” குயிலாகப் பிறக்கவேண்டும் என்றால் மாம்பழம் மீது ஆசை வைக்க வேண்டும். வேப்பம்பழம் கூடாது”

மேலும் சொன்னார், ” மலம் தின்னும் பன்றி யானையாகப் பிறக்க ஆசைப்பட்டால், கரும்பு தின்ன ஆசைப்பட வேண்டும்”


வாழ்க்கைச் சுவை

மே 13, 2007

ஓர் ஊரில் ஒரு வீட்டில் ஒரு கூண்டுக் கிளிக்குத் தினமும் உண்ண மிளகு கொடுத்து வந்தார்கள். அந்தக் கூண்டுக்கிளி காரமான மிளகைச் சகித்தபடி உண்டு வந்தது. ஒரு நாள் ஒரு வழிப்போக்கன் அக்கிளி மிளகு உண்பதைக் கண்டு வருந்தி, அதற்கு ஒரு கருப்பு திராட்சையை உண்ணக் கொடுத்தான்.

கிளி அப்பழத்தின் சுவையில் மயங்கி, அவனிடம் ” இது என்ன பெரிய மிளகு, தித்திப்பாக இருக்கே?” என்று வினவியது.

அதற்கு அவன், இதைவிடத் தித்திப்பான ஒன்று உண்டு. அது உனக்கு நினைவில் இல்லை. இப்போது பார் அந்த தித்திப்பின் சுவையை என்று கூறியபடியே அக்கிளியின் கூண்டுக்கதவினைத் திறந்து அக்கிளியை வெளியே பறக்க விட்டான்.

போன மாதம் பொதிகையில் காட்டப்பட்ட ஆதிசங்கரர் திரைப்படத்தில் வந்த ஒரு காட்சி.


நாம இனிமே . . .

மே 13, 2007

ஒரு நத்தை மெள்ள நடந்து வந்து கொண்டிருந்தது. அது வரும் பாதையில் ஒரு பெரிய காளான் குடை இருந்தது. அப்போது மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. நத்தை மழைக்கு அந்த காளான் குடைக்கு கீழே வந்து ஒதுங்கியது.

அதன் உடல் காளான் குடை மேல் உரசியது. மேலும், நத்தையின் எச்சில் காளான் குடை மேல் பட்டு விட்டது. காளான் குடை, மெல்லத் தன் தொண்டையை செருமியபடி, நத்தையே நீ உன் ஓட்டுக்குள்ளேயே ஒதுங்கியிருக்கலாமே, எனக்கு இடைஞ்சலாக இங்கே ஏன் ? எனக் கேட்டது.

நத்தை அதற்கு ஆமாம் இருக்கலாம் தான் என்று பதில் சொல்லிகொண்டிருக்கும் போதே இன்னொரு நத்தை அந்தப் பக்கமாக வந்தது, மேலும் அது பேசிக்கொண்டிருக்கும் இந்த நத்தையைப் பார்த்து விட்டு அதுவும் காளான் குடைக்குக் கீழே வந்து ஒதுங்கிக் கொண்டது. அப்போது இரண்டு நத்தைகளுக்கும் அந்த இடம் போதவில்லை. இரண்டும் ஒன்றை ஒன்று தள்ளியபடியே இருக்க, அப்போராட்டத்தில் காளான் குடை உடைந்து, சரிந்து கீழே விழுந்து விட்டது.

அப்போது ஒரு நத்தை இன்னொரு நத்தையிடம் சொன்னது, ” நாம இனிமே . . . “

இந்தக் கதை பிரேம்-ரமேஷ் எழுதிய பரதேசி என்ற நாவலிலிருந்து.