சுதா ரகுநாதன் பாடிய மானசப் பொய்கையிலே … என்ற தொகுப்பில் உள்ள நாளை வரும் என்று நம்பலாமா ?
என்ற பாடலைக் கேட்டவர்கள் யாராவது உண்டா ?. இப்பாடலைக் கேட்ட உடன் என் மனம் அடைந்த உணர்வுகளை வார்த்தையில் எழுத முடியாது என்று தோன்றினாலும், இது ஒரு பகிர முடியாத உன்னத அனுபவம் என்று மட்டும் என்னால் சொல்ல முடியும். பொதுவாகவே முருகன் பாடல்கள் என்பது மனதை உலுக்கி விடும் இயல்பாக அமைவது எனக்கு ஒரு வியப்பு. உதாரணமாக, பல பாடல்கள் என்னால் சொல்ல முடியும்.
என் அவதானிப்பு இப்படியாக
1. பாதிமதினதி – கே.ஜே .ஜேசுதாஸ் பாடியது – தரங்கிணி வெளியீடு (லைவ் கான்ஸர்ட் வால்யூம் -4)
2. பக்தியால் யான் உனைப் பல காலம் – கே.ஜே .ஜேசுதாஸ் பாடியது – தரங்கிணி வெளியீடு (லைவ் கான்ஸர்ட் வால்யூம் -4)
3. குறிஞ்சி நிலத் தெய்வம் முருகனே – கே.ஜே .ஜேசுதாஸ் பாடியது – தரங்கிணி வெளியீடு ( முருகன் பாடல்கள்)
இப்பாடல்கள் எழுதியவர், பாடியவர், ராகம், பின்ணணி இசை, ஒலிப்பதிவு என்று பல அம்சங்கள் சேர்ந்த ஒன்று.
கந்த சஷ்டிக் கவசம் பாடலின் உக்கிரகம் அதைக் கேட்டவர்களுக்கு நன்கு தெரியும். ( நான் கேட்டது சூலமங்கம் சகோதரிகள் பாடியது)
அதே வரிசையில் சண்முக கவசமும் நான் பல முறை (சஷ்டி கவசத்தை விட) திரும்பத் திரும்பக் கேட்கும் ஒரு ஒரு ஒலி வடிவம். ( சீர்காழி கோவிந்த ராஜன் பாடியது)
இப்படியாகச் சில பாடல்கள் மூலம் நான் முருகன் பாடல்கள் பற்றிய ஒரு அபிப்பிராயமும், விருப்பமும் கொண்டிருந்தேன்.
சுதா ரகுநாதன் பாடிய பாடலினை எழுத்து வடிவில் இங்கு பதிந்துள்ளேன். இப்பாடலில் வரும் “மனமுருகி” என்ற சொற்பிரயோகம் சுதா ரகுநாதனால் பல விதங்களில் ஏற்ற இறக்கத்துடன் பாடப்பட்டது கேட்பவர் மனம் உருகிவிடும் சக்தி படைத்தது.
நாளை வரும் என்று நம்பலாமா ? (2)
குகன் தாளைப் பணிந்தருள் பெற வேண்டாமா?
நாளை வரும் என்று நம்பலாமா ?
குகன் தாளைப் பணிந்தருள் பெற வேண்டாமா?
நாளை வரும் என்று நம்பலாமா ?
வேலைப் பிடித்தக் கந்தவேளை மனமுருகி(4)
காலை மாலை இரு வேளையும் துதிக்காமல்(2)
நாளை வரும் என்று நம்பலாமா ?
குகன் தாளைப் பணிந்தருள் பெற வேண்டாமா?
நாளை வரும் என்று நம்பலாமா ?
அழகான வாலிபம் அணங்குடனே தீரும் (2)
திரண்டுவரும் நேரம் கவலை பல சூழும் (2)
அழகான வாலிபம் அணங்குடனே தீரும்
திரண்டுவரும் நேரம் கவலை பல சூழும்
திருமுருகன் நாமம்
நாமம்
திருமுருகன் நாமம் நினைக்க நேரமில்லை (2)
மறுபிறவி என்பது எங்கோ தெரியவில்லை (2)
நாளை வரும் என்று நம்பலாமா ?
குகன் தாளைப் பணிந்தருள் பெற வேண்டாமா?
நாளை வரும் என்று நம்பலாமா ?
நம்பலாமா ? நம்பலாமா ?
இப்பாடல் தொகுப்பில் உள்ள மற்ற பாடல்களில் வேறு சில பாடல்களும் வார்த்தைகளால் விவரிக்க இயலாத தன்மையுடைய சிறப்புடையவை.
1. அபிராமி அந்தாதியின் தனம் தரும் கல்வி வரும் எனத் துவங்கும் ஒரு அம்மன் பாடல்
2. மானசப் பொய்கையிலே
3. நாதர் முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே
