பசி – 2

எனது எதிர் வீட்டுக் காம்பவுண்ட் சுவர் வழியாக ஒரு எச்சில் இலை கொஞ்சம் உணவுடன் சாலையில் வந்து விழும் ஒலி கேட்டு இன்று மூன்று ஜீவன்கள் திரும்பிப் பார்த்தன. அந்த மூன்று ஜீவன்களில் நானும் ஒருவன். மற்ற இரண்டு ஜீவன்கள் ஒரு ஆடும், நாயும்.

இரண்டும் ஆர்வத்துடன் இலையை நோக்கி ஓடி வந்தன. நாய் மிகுந்த தன்னம்பிக்கையுடனும், அதிகாரத்துடனும், அந்த இலையை நெருங்கி முகர்ந்து பார்த்து பின் நக்கிச் சாப்பிடத் துவங்கியது.

ஆட்டிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அது ஒரு முறை குரலெழுப்பித் தன் இருப்பைத் தெரிவித்தது, பதிலுக்கு நாய் கடுமையாக முகம் திருப்பிக் வள் என்று குலைத்தது.

ஆட்டினால் இலை வேண்டம் என்று நகர்ந்து போகவும் முடியவில்லை. அங்கேயே காத்திருக்கவும் முடியவில்லை. அந்த இலையை மீட்கவும் தெரியவில்லை.

நாய் ஆடு வந்து இலையை பறித்துவிடாமல் இருக்க சற்று அவசரத்துடன் இலையை இப்போது நக்கத் துவங்கியது.

ஆட்டிற்கு உணவு இலை. நாய்க்கு உணவு அந்த இலையில் உள்ள மிச்சம் மீதி மட்டுமே. அதால் இலையை உண்ண முடியாது.

இரண்டிற்கும் பொதுவான ஒரு அம்சம் பசி !

மறுமொழி இடுக