என்னுடன் படித்தவர்கள் நல்ல நிலைமையில் உள்ளனர். அவர்களையேப் பார்த்துப் பழகிய நான் சென்ற வாரம் ஒரு திருமணத்தில் காய் நறுக்கும் கோலத்தில் என் பள்ளி நண்பன் வாசுவைப் பார்த்து திகைத்தேன்.
முதலில் அவன் தானோ என்று சந்தேகம், பின்பு அவன் அடுத்தரிடம் பேசும் தோரணை அவனை எனக்கு அடையாளம் காட்டியது.
மிமிக்ரி செய்வதில் தேர்ந்தவன். அவன் பேசத் துவங்கினாலே எங்கள் நட்பு வட்டம் சிரிப்பில் மிதக்கும். அவன் குரல், உல்லாசம் நிறைந்த அந்தக் கால வாழ்க்கையை ஒரு கணம் என் நினைவில் மின்னலடித்தது.
எனது வழுக்கைத் தலை அவனுக்கு என்னை அடையாளம் காண சிரமம் இருந்தது. நானாகச் சென்று என்னை அறிமுகப்படுத்திய பின் அவன் முகத்தில் என்னை நினைவுக் கொண்டுவந்த மகிழ்ச்சி உடனே தெரிந்தது. ராமா, நீயாடா? என்று கத்திக் கையோடு என்னைக் கட்டியணைத்தான்.
பெருங்களத்தூர் ஸ்டாண்டர்ஸ் மோட்டார்ஸ் தொழிற்சாலையில் ஒரு தொழிலாளியாகப் பணிபுரிய வேண்டும் என்பது அவனின் அந்தக் காலக் கனவு மற்றும் இலட்சியம். இன்று அவனின் கனவும் நிஜம் இல்லை, அந்தத் தொழிற்சாலையும் இல்லை. பரஸ்பர விசாரிப்புக்குப் பின் அவனது இந்த வாழ்க்கைப் பற்றிப் பேச்சு திரும்பியது.
அவன் எல்லாவிதச் சமையலும் செய்வதில் தேர்ந்தவனாம். அவனுக்குத் தெரியாத சைவச் சமையல் வகை இன்றுவரை கிடையாதாம்.
அவன் சொன்னான், “ஒவ்வொரு மனிதனுக்கும் நினைவு எப்படி அவசியமோ, அப்படியே புனைவும் அவசியம்”. வாழ்க்கையில் உள்ள வினோதத்தையும், யதார்த்தமற்றப் போக்கையும் எதிர்கொள்ள இது மிகவும் அவசியம்”.
என்னால் விதவிதமான பல விலையுயர்ந்த உணவு வகைகளைச் சமைக்க முடியும். எனக்கும் அந்த உணவிற்கும் உள்ள இடைவெளி மிகவும் அதிகம். பல வித விலையுயர்ந்த உணவு என்னால் சமைக்கப்பட்டு பலருக்குப் பரிமாரப்படும்போது எனது ஆத்மா ஒரு நிறைவு அடைகிறது. நான் அந்தப் பசியையும், உணவையும் சேர்த்துக் கற்பனையில் அந்தக் கலப்பு நிகழ்ச்சியை என்னை வைத்து எண்ணி மனநிறைவடைகிறேன்.
எனது தின வாழ்க்கையில் நான் உண்ணும் உணவு வேறு வகை. பசி என்பதை அனுபவித்துப் பார்த்தவன் நான். அப்பசியை அடக்க நான் செய்த பரிசோதனை முயற்சிகள் பல. அதில் ஒன்று என்னால் மறக்க முடியாதது. “பசி என்பதை அடக்க வினோதமான சில பழக்க வழக்கங்கள் பசித்தவர்கள் இடையே உள்ளன. அதில் ஒன்று சிகரெட் அல்லது சுருட்டுச் சாம்லை நீரில் நனைத்து நக்கிச் சுவைப்பது. எனக்குச் சிகரெட் பிடிப்பதில் விருப்பமில்லாவிட்டாலும், அதன் சாம்பல் தரும் சுவைக்கு ஈடாக வேறு ருசியும், போதையும் வேறெவற்றிலுமில்லை.”
நான் செய்வது யாருக்கும் தீங்கில்லை.
ஆனால் என் செயலில் எனக்கு உறுத்தலில்லை.
இது நான் உருவாக்கிய வலி நீக்கும் மருந்து.
நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
“நாய்கள் அமைதியாகப் பசியின்றி
வாழ்ந்து சாகும் உலகத்தில் தான்
இறைவன் இருப்பாராம்.”
என் நண்பன் போன்றவர் பசியின்றி
வாழ்ந்து சாகும் உலகத்தில்
யார் இருப்பார்கள் ?”
எனக்குத் திருமூலர் பாடல் நினைவுக்கு வருகிறது.
“அன்புள் உருகு அழுவான் அரற்றுவன்
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
என்பொன் மணியை இறைவனை யீசனைத்
தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே”
RAM பதிப்பித்தது.
RAM பதிப்பித்தது.