திடீரென்று என் மனதில் சில வாக்கியங்கள் உருவாயின. அவை அற்புதமானவையாக எனக்குப் பட்டது. இதற்கு முன் இவ்வளவு அற்புதமான வாக்கியங்கள் என்னால் சிந்திக்கப்பட்டு உருவானதில்லை என்ற உண்மையும் எனக்குப் புரிந்தது.
அந்த வாக்கியங்களை நான் திரும்ப ஒரு முறை சொல்லிப்பார்த்தேன்.
அப்போது வேறு சில வாக்கியங்களும் என் சொல்லுதலுடன்
தாமகவே வந்து சேர்ந்துவிடும் அழகு அல்லது கொடுமை நிகழ்ந்தது.
எனது கணிணியில் அவற்றைத் தட்டச்சு செய்யும் எண்ணத்தில் எழுத அமர்ந்தேன். வேகமான ஒரு ஆறு போல வார்த்தைக்குப் பின் வார்த்தை, அதன் தொடர்ச்சியாக வாக்கியம் என அவை வளர்ந்து மொத்தமாக ஒரு பொருளை உருவாக்கி விட்டன.
சக்தி என்பதின் பொருள் விளங்குவது போல இருந்தது.
இந்த எழுதுகிற வேகம் பல நிமிடங்கள் நீடிக்கிறது. சம்பவங்களும், பேச்சுக்களும் என் மூளையில் பொங்கி வழிந்தபடி உள்ளது. இந்த ஆனந்தத்தில் திளைப்பது எவ்வளவு சுகமானது ? இச்சுகத்தை எதனுடன் ஒப்பிட முடியும் ? நான் அந்த ஆனந்ததிற்குக் கட்டுப்படுவது சில நிமிடங்களே. இவையே நினைத்தபொதெல்லாம் என்னால் அனுபவிக்க முடியும் என்று என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
சிந்தனையின் வேகத்தில் எழுதிச் சமாளிக்க முடியாமல் பல விஷயங்களை நான் விட்டுவிடுவது என் மனத்துயரை அதிகரித்துவிடுகிறது. என்னால் முடிந்த அளவு வேகமாகவும், நினைவுக் கூட்டியும் எழுதுகிறேன். அப்படியும் விடுபட்ட விஷயங்கள் பல என்னை ஏக்கமுறச் செய்கிறது.
நான் எழுதியதிலும், வாசித்ததிலும் கூட இது தான் சிறந்தது என்று ஏனோ ஒரு எண்ணம் எனக்குக் தோன்றுகிறது.
RAM பதிப்பித்தது.